கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரியை தூர்வார நடவடிக்கை இல்லை மாறாக பறவைகள் திட்டு அமைக்கிறார்கள் விவசாயிகள் 4.95 கோடி வீண் என புகார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி அருகே உள்ள கரைவெட்டி பரதூர் கிராமத்தில் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏரியானது முன்னாள் முதல்வர் காமராசர் காலத்தில் 1959 ஆம் ஆண்டு கரைவெட்டி ஏரி நிர்மாணிக்கப்பட்டது. புள்ளம்பாடி வாய்க்கால் வழியாக காவிரி நீர் முசிறி வாத்தலை என்ற கிராமத்திலிருந்து பிரிந்து சமயபுரம் வழியாக புள்ளம்பாடி பளிங்காநத்தம் மானோடை ஏரி நிரம்பி வெங்கனூர் ஆண்டி ஓடை ஏரி வழியாக கரைவெட்டி ஏரிக்கு தண்ணீர் வரும். பின்னர் சுக்கிரன் ஏரியில் நிரம்பி களிங்கு வழியாக சென்று கலந்து கொள்ளிடத்தில் கலக்கிறது. கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரி 1100 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான பெரிய ஏரி கால் டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்க முடியும். இந்த ஏரியால் கரைவெட்டி பரதூர், வெங்கனூர், தட்டாஞ்சாவடி, அரண்மனைக்குறிச்சி, பாளையபாடி, அன்னிமங்கலம், குந்தபுரம், சேனாபதி, முடிகொண்டான்,
மேலக்காவட்டாங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. ஆனால் வாய்க்கால்களை முறையாக தூர்வார நடவடிக்கை இல்லை. கரைவெட்டி ஏரியை ஒரு மீட்டர் ஆழத்துக்கு 11 சதுர கிலோமீட்டர் ஏரியைத் தூர்வாரினால் ஏறத்தாழ 1 டி எம் சி தண்ணீர் சேமிக்க முடியும். ஆனால் தற்போது அரசு ஒதுக்கி உள்ள நிதியானது 4.95 கோடி இதில் இரண்டு வாய்க்கால்களில் உள்ள மதகுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏரியைத் தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை புறந்தள்ளப்பட்டு உள்ளது வேதனைக்குரியது. ஒட்டுமொத்த 4.95 கோடியும் ஏரித்தூர்வார செலவழித்திருந்தால் மூன்று போகமும் விவசாயம் செய்திருக்க வாய்ப்பு ஏற்படும். இது குறித்து விவசாயிகள் கூறுகையில் எத்தனையோ போராட்டங்கள் செய்தும் நாங்க கேட்டது கிடைக்கல. நாங்க என்ன கேட்டோம் நீங்க என்ன செய்றீங்க என கொந்தளிக்கின்றனர்.
எந்தவொரு நிபந்தனையும் இன்றி ஏரியில் வண்டல் மண்ணை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என வருவாய் துறையினர் மூலம் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்தாலே பைசா செலவு இல்லாமல் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் செல்வர் அதற்கும் நடவடிக்கை இல்லை. அனுமதிக்காக அலுவலர்களை சந்தித்து அனுமதி வாங்குவதற்குள் கோடை காலமே முடிந்து விடும் போலிருக்கிறது. ஏற்கெனவே கொரோனா ஊரடங்கால் பணிகள் முடங்கி இருந்ததால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் துரிதப்படுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நாளை 12 மேட்டூர் அணை திறக்கப்பட்டால் கரைவெட்டி ஏரிக்கு வருமா எனவும் விவசாயிகள் எதிர்பார்ப்பு.
அரியலூர்மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.